பெற்றோரை மதிக்காத பேதைப் பறவைகள் !

திசை மாறிய பறவை (03)

 

(நிகழ்ச்சிகள் உண்மை; யாருடைய மனமும் புண்படாதிருக்கும் பொருட்டுப் பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளன)

 

தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டியைச் சேர்ந்தவர் நடேசலிங்கம். அரசுப் பணியில் அன்னிலையாக (TEMPORARY) பணி புரிந்த ஆயிரக் கணக்கானவர்களை வரன்முறைப் படுத்தி, நிலைப் பணிக்கு  மாற்றி, அரசு ஆணையிட்டபோது இளநிலை உதவியாளராகப் பணியேற்றவர்!

 

ஓசூரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் தனது சேவையைத் தொடங்கிய நடேசலிங்கம், கடுமையான உழைப்பாளி.  அரசு விதிமுறைப் புத்தகங்களையும், அரசு ஆணைகள் அடங்கிய இருப்புக் கோப்புகளையும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஆழ்ந்து படித்து, விதிமுறைகளை நன்கு அறிந்த ஒரு பணியாளர்  என்று நற் பெயரை ஈட்டிக் கொண்டவர் !

 

உயர் அதிகாரிகளிடம் தனது பணித்திறமையால் நெருக்கமானவர். அரசுப் பணியில் நிலைப்புப் பெற்றவரைப் பெற்றோர் சும்மா விடுவார்களா ? உறவுக்காரப் பெண்ணொருத்தியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். காலப் போக்கில் இரு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன !

 

ஆண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை  நிறைவு செய்ததும் இருவரையும் அடுத்தடுத்துப் பட்டயப் படிப்பில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஒருவர் எந்திரப் பொறியியல் பிரிவிலும் இன்னொருவர் மின்னியல் பிரிவிலும் படித்து, பட்டயம் (DIPLOMA) பெற்றனர். இதற்கிடையில் 12 –ஆம் வகுப்பு வரைப் படித்த தன் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று நடேசலிங்கம் முடிவு செய்தார் !

 

அவருடைய உடன் பிறந்த தங்கை மகன் ஒருவர் ஓசூரை அடுத்த இராயக்கோட்டையில் சிறு கடை ஒன்றை வைத்திருந்தார். இளங்கலைப் பட்டப் படிப்பு (B.A.) வரைப் படித்திருந்த அவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைக்க நடேசலிங்கம் விரும்பினார். அவர் மனைவியும் அதற்கு உடன்பட்டு, திருமணப் பேச்சைத் தொடங்கினர் !

 

இரண்டு திங்கள் அளவில் நடேசலிங்கத்தின் மகள் செல்வி பூவழகிக்கும், அவரது தங்கை மகன் செல்வன் செம்பியனுக்கும் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் ஓசூரில் உள்ள  செல்வம் திருமண அரங்கில்  1990 –ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது !

 

நடேசலிங்கம், தன் மாப்பிள்ளைக்குத் திருமணச் சீராக      உருபா பத்து  இலட்சம் கொடுத்துக் கடையை விரிவாக்கிக் கொடுத்தார். மணமக்கள் இராயக் கோட்டையில் தனி வீடு பார்த்து புதுக் குடித்தனம் தொடங்கினர். அவர்களுடன் மாப்பிள்ளையின் தாயார் கண்மணியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கண்மணியின் கணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் !

 

இதற்கிடையில் நடேசலிங்கம் தன் மூத்த மகன் சிந்தனைச் செல்வனுக்கு ஓசூரில் உள்ள ஏதாவதொரு தொழிலகத்தில் வேலை பெறுவதற்கான முயற்சியில் இறங்கினார். அசோக் லேலண்டு தொழிற்சாலை அருகிலுள்ள வேறொரு நிறுவனத்தில் சிந்தனைச் செல்வனுக்கு நிலையான வேலை கிடைத்தது – தந்தையின் விடாமுயற்சியால் !

 

ஆண்டுகள் சில உருண்டோடின. இளைய மகனுக்கும் இன்னொரு தொழிலகத்தில் வேலை கிடைத்தது. – தந்தையின் கடின முயற்சியால் ! ஈராண்டுகளில்  அவரும் பணியில் நிலைப்புப் பெற்றுவிட்டார் ! இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த நடேசலிங்கம் 1999-ஆம் ஆண்டு உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றார். அவரது வாழ்க்கைச் சக்கரம் இவ்வாறு சீராக ஓடிக் கொண்டிருக்கையில், மருமகன் சிந்தனைச் செல்வன் மகளைக் கொடுமைப் படுத்துவதாக இலைமறை காயாகச் செய்திகள் வரத் தொடங்கின !

 

கடை வணிகத்தில் இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், அதிலிருந்து மீளப் பண உதவி செய்ய வேண்டும் என்றும் ஒருநாள் பூவழகி தந்தையிடம் வந்து கேட்டார். நடேசலிங்கம் உருபா ஒரு இலட்சம் கொடுத்தனுப்பினார். பின்னர் இது தொடர்கதையாகிப் போனது. மருமகன் செம்பியன் தன் மனைவியை அனுப்பி மாமனாரிடம் பணம் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார் !

 

அரசுப் பணி என்னும் ஓடத்தில் ஏறி, நீர்ச்சுழி நிறைந்த வாழ்க்கை என்னும்  ஆற்றை ஒருவாறாகக் கடந்து வந்த நடேசலிங்கம் 2005-ஆம் ஆண்டு ஓடத்திலிருந்து இறங்க வேண்டி வந்தது. ஆம் !  2005 –ஆம் ஆண்டு சூலை இறுதியில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுகாலப் பணப் பயன்களாக மொத்தம் 22 இலட்சம் கிடைத்தது. இந்தப் பணத்திலிருந்து ஒரு பகுதியைக் கொண்டு இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

 

திருமணச் செலவு போக உருபா 12 இலட்சம் அவரது கைவயம் இருந்தது. தங்கை இந்தப் பணத்தைக் கொத்திக்கொண்டு போய்விடக் கூடாது எனக் கணக்குப் போட்ட சிந்தனைச் செல்வன் வீடுகட்டுவதற்கென பணம் தேவைப்படுவதாகச் சொல்லித் தந்தையிடம் பணவுதவி கேட்டார். இளைய மகனும் விழித்துக்கொண்டு தன் பங்குக்குத் தந்தையிடம் வீட்டு மனை வாங்கப் பணம் கேட்டார் !

 

இன்னொரு பக்கம் மகள் தனக்கும் உதவி செய்யுமாறு தந்தையை வற்புறுத்தினார். பொறியில் மாட்டிக்கொண்ட எலியாகிப் போனார் நடேசலிங்கம்.  2 இலட்சத்தை மகளுக்கும் தலா 5 இலட்சம் வீதம் இரு மகன்களுக்கும் கையிலிருந்த பணத்தை முழுவதுமாகப் பிரித்துக் கொடுத்தார். பணம் கிடைத்தவுடன் இரு மகன்களும் தம் மனைவியருடன் தனிக் குடித்தனம் சென்றுவிட்டனர். நடேசலிங்கம் எவ்வளவோ முயன்றும்கூட, அவர்கள் தனிக் குடித்தனம் செல்வதைக் தடுக்க இயலவில்லை !

 

ஆறு மாதங்கள் காற்றாகக் கரைந்து போயின. மகள் பூவழகி தன் மகள் இலக்குமியுடன் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டாள். கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னால் இனி கணவனுடன் வாழ முடியாது என்றும் புலம்பி மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள் !

 

இரு மகன்களும் இந்தச் சிக்கலில் தங்களால் தலையிட முடியாது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டனர். சில பெரிய மனிதர்கள் துணையுடன் மருமகனுக்கு நல்வழி காட்டி, அறிவுரைகள் சொல்லி  மகளின் வாழ்க்கையைச் சீர் செய்ய நடேசலிங்கம் பெரிதும் முயன்றார். ஆனால் இறுதியில் மகள் பூவழகி வாழாவெட்டியாகத் தந்தை விட்டிலேயே தங்கிவிட்டாள் !

 

12-ஆம் வகுப்பு வரைப் படித்திருக்கும் பூவழகியை ஆசிரியர் பயிற்சியில் சேர்த்துவிட எண்ணி, இரு மகன்களிடமும் நடேசலிங்கம் பணம் கேட்டார். மறுத்துவிட்டனர். உங்கள் மகளை, அவள் வீழ்ந்து கிடக்கும்  பாழுங் கிணற்றிலிருந்து மீட்க எண்ணி  எங்களையும் ஓட்டாண்டி ஆக்கிவிடாதீர்கள் ! உங்களுக்கு உதவ முடியாது !

 

உருப்படாத மனிதனைக் கட்டிக் கொண்ட அவள் எங்கள் தங்கையும் அன்று; அவளுக்காக எங்களையும் சுரண்டி வாழ நினைக்கும் நீங்கள் எங்கள் தந்தையும் அன்று ! சென்றுவிடுங்கள்; இனி நமக்குள் எந்த உறவும் வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி அவரை அடிக்காத குறையாக விரட்டி விட்டனர் !

 

இளம் பருவத்தில் பிள்ளைகளைப் படிக்க வைப்பதும், படித்த பின் வேலை வாங்கித் தர அலையாய் அலைவதும், வேலை கிடைத்த பின் திருமணம் செய்து வைப்பதும் மட்டுமே ஒரு தந்தையின் கடமையோ? ”மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்” என்னும் வள்ளுவரின் வாக்கு பொய்தானோ ? ( குறளின் பொருள்:- மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, “இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ” என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும் )

 

வாழாவெட்டியாகிவிட்ட மகளுக்கும், மகள் பெற்றெடுத்த பெண்குழந்தைக்கும் இனி தாமே பற்றுக்கோடு ! அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும், மகளுக்காகவும், பெயர்த்திக்காகவும் ஏதாவது வேலை பார்த்தாக வேண்டும். இதோ கைகளில் கல்விச் சான்றுகளுடன் வேலை தேடிப் புறப்பட்டுவிட்டார் நடேசலிங்கம் !

 

அரிசி பாதி வெந்த நிலையில் சோறு வடிக்கும் மண்பானையில் விரிசல் விழுந்துவிட்டது. இனி பானையும் பயன்படாது; சோறும் வேகப் போவதில்லை. சிறகு முளைத்த பின்  பறவைகள் பறந்து சென்றுவிட்டன. தந்தைப் பறவை தனி மரமாகிவிட்டது. வெள்ளந்தியான மனைவியால் அவருக்கு வாழ்க்கையில் வலியுமில்லை; உதவியுமில்லை ! திசை மாறிய பறவைகள் இரண்டும் இனி கூடு திரும்பவா போகின்றன ?

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,



வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்,

[திருவள்ளுவராண்டு: 2054, நளி (கார்த்திகை) 10]

{26-11-2023}

----------------------------------------------------------------------------------------------



 

 

 

 

திசை மாறிய பறவை (02)

 

[நிகழ்ச்சிகள் உண்மை; யாருடைய மனமும் புண்படாதிருக்கும் பொருட்டுப் பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளன]

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரைச் சேர்ந்தவர்  கலியமூர்த்தி. தமிழக அரசுத்துறை ஒன்றில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி பெயர் அமுதா; இல்லத்தரசி. இந்த இணையருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவர் முத்துக்குமார்; இளையவர் சிவகுமார் !

 

இரு குழந்தைகளையும் நல்லொழுக்கமும் நற்குணங்களும் அமைந்தவர்களாக வளர்ப்பதில் இந்த இணையர் முனைப்பாக இருந்தனர். பிள்ளைகளும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வளர்ந்ததுடன் படிப்பிலும் கெட்டிக்காரர்களாகத் திகழ்ந்தனர்! கணினிப் பயன்பாட்டியலில் முதுகலை (M.C.A) வரைப் படித்துப் பட்டம் பெற்ற இருவருக்கும் இடையே அகவை வேறுபாடு மூன்று ஆண்டுகள்தான்!

 

தமிழில் ஆர்வம் கொண்டு கவிதைகள் புனைவதிலும் வல்லவராக இலங்கிய கலியமூர்த்தி பொதுப்பணியிலும் ஈடுபட்டு, தாம் பணிபுரிந்த துறையின் அலுவலர்கள் சங்கத்திலும் முகாமையான பொறுப்பினை ஏற்றுச் செயல்பட்டு ஊரறிந்த வானம்பாடியாக வலம் வந்தார்  !

 

தனது வாழ்க்கை முறைமையை ஒரே சீரான நேர்கோட்டில் அமைத்துக்கொண்டு, அதைப் பின்பற்றிவந்த அவர், உடல் நலம் பேணுவதிலும் குறை வைத்ததில்லை. பணியிலிருந்து ஓய்வு  பெற்றபின் சென்னைக்குக் குடி பெயர்ந்த கலியமூர்த்தி, ஓய்வு காலப் பணப் பயன்களைக் கொண்டு சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கி, மனைவி மற்றும் இரு பிள்ளகளுடன் அங்கு வாழ்ந்து வரலானார் !

 

இருபிள்ளைகளுக்கும் மென்பொருள் (SOFT WARE) துறையில் பணி வாய்ப்புக் கிடைத்தது. நல்ல ஊதியமும் கிடைத்தது. மூத்த பிள்ளை  முத்துக்குமாருக்குத் திருணம் செய்து வைத்திட  கலியமூர்த்தி – அமுதா இணையர் முடிவு செய்தனர். உற்றார் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் எல்லாம் தம்மை முன்னிறுத்திக் கொண்டு உழைப்பதில் ஈடுபாடு காட்டிய இந்த இணையருக்கு, மகனுக்குப் பெண் பார்ப்பதில் உறவினரின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது !

 

முத்துக்குமாருக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடுவதில் கலியமூர்த்தி மிக முனைப்பாக ஈடுபட்டார். அவரது நண்பர்கள் சிலரும் அவருக்கு உதவ முன்வந்தனர். ஒரு திருமணம் முடிவாக வேண்டுமென்றால் என்னதான் நண்பர்களின் உதவி இருந்தாலும், உறவினர்களின் பங்களிப்பும் கட்டாயம் தேவை. ஆனால் இதில் கலியமூர்த்திக்கு உறவினர்களின் உதவி போதுமான அளவிற்குக் கிடைத்ததில்லை !

 

திருமணத் தகவல் தொடர்பு மையங்களில் பிறப்பியம் (ஜாதகம்)  கேட்டு அவர் பெருமளவுக்குச் செலவு செய்திருந்தாலும், அதனால் கிடைத்த பயன் மிகக் குறைவே. இறுதியில் ஏதோவொரு வகையில் ஒரு பெண்ணைப் பற்றிய செய்தி கிடைத்தது. அவரது பெற்றோர் நெல்லிக்குப்பத்தில் வாழ்ந்து வந்தனர் !

 

அந்தப் பெண்ணின் பெயர் இளவேனில். அவரது தந்தை ஆனந்தவேல். தந்தை தாய் இருவருமே ஆசிரியர்கள். அந்தப் பெண் சென்னையில்  அரசுத்துறையில்   உதவியாளராக (ASSISTANT)  பணி புரிந்து வந்தார். கலியமூர்த்தி வீட்டாரும், ஆனந்தவேல் வீட்டாரும் கலந்து பேசியதில் ஒருவர்க்கொருவர் பிடித்துப் போயிற்று. திருமணம் முடிவாகி விழுப்புரம் மாவட்டம் மயிலத்திலுள்ள  மண்டபம் ஒன்றில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புத் திருமணம் நடைபெற்றது !

 

முத்துக்குமாரும்  இளவேனிலும் திருமணத்திற்குப் பிறகு சென்னை சேத்துப்பட்டு அருகில்  வீடு பார்த்துத் தனிக்குடித்தனம் தொடங்கினர். இருவரும் பணியிலிருந்ததால், பணப்புழக்கத்திற்குப் பஞ்சமில்லை. விடுமுறை நாள்களில் இளவேனிலை அழைத்துக்கொண்டு தனது தாய் தந்தையர் வாழ்ந்துவரும் குரோம்பேட்டைக்குச் சென்று வருவதை முத்துக்குமார் வழக்கமாகக் கொண்டிருந்தார் !

 

காலச்சக்கரம் விரைந்து சுழன்றது. முத்துக்குமார் – இளவேனில் இணையருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு அலுவலகப் பணிகளுடன் குழந்தை வளர்ப்புப் பணியும் சேர்ந்துகொண்டதால் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. முத்துக்குமாரின் தாயார் குழந்தை வளர்ப்பில் ஒத்தாசையாக இருந்ததால் எல்லாப் பணிகளையும் ஒருவாறு சமாளித்து வந்தனர் !

 

முத்துக்குமார் – இளவேனில் இருவருமே அன்றாடம் அலுவலகம் சென்று வருபவர்கள். பணியில் மிகையான  சுமை, சில நேரங்களில் மேலதிகாரிகளின் கண்டிப்பால் ஏற்படும் மனக் காயம், அதனால் விளையும் இறுக்கம் (TENSION) இருவழிப் போக்குவரத்தினால் ஏற்படும்  களைப்பு, எல்லாம் சேர்ந்து இருவரையும் ஒவ்வொரு நாளும் சோர்வடையச் செய்தது !

 

திருமணமான ஒரு ஆடவன், தன் மனைவி தன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஒரு படம் வரைந்து வைத்திருப்பான். அதுபோலவே, மனைவியும், தன் கணவர் எப்படியெல்லாம் தன்னிடம் அன்புகாட்டிப் பழக வேண்டும் என்று தன் மனதிற்குள் படம் வரைந்து வைத்திருப்பாள் !

 

உடலும் மனமும் சோர்வில்லாத நாள்களில் முத்துகுமார் – இளவேனில் இருவரும் வரைந்து வைத்திருந்த மனப் படங்கள் எண்ணியபடியே நடப்புக்கு வந்தன. வீட்டில் மகிழ்ச்சி நிலவியது. ஆனால் அலுவலகம் சென்றுவிட்டுச் சோர்வுடன் வீட்டிற்குத் திரும்பிய நாள்களில், மனப் படங்கள் செயலுக்கு வரவில்லை. உடற்சோர்வும், மனக் களைப்பும் இனிய சூழ்நிலையை விழுங்கி வந்தன. கணவன் – மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் இதுதான் நிகழ்வாய்ப்பு என்பது யாராலும் மறுக்கவியலாத  உண்மை !

 

தான் எதிர்பார்த்தபடி வீட்டுப் பணிகளை மனைவி நிறைவேற்றுவதில்லை என்ற எண்ணம் முத்துக்குமாருக்கும், தன் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் கணவர் நிறைவேற்றுவதில்லை என்ற எண்ணம் இளவேனிலுக்கும் மெல்ல மெல்லத் தோன்றத் தொடங்கின. இருவருக்கும் தம் மனதிற்குள் சிறு விதையாக முளைவிட்ட  இந்த எண்ணம். காலப்போக்கில்  செடியாகி மரமாகி குடும்பம் என்னும் கோட்டையில் விரிசலை ஏற்படுத்தத் தொடங்கியது !

 

ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றைப் பெறமுடியும் என்னும் உண்மையை முத்துக்குமார் – இளவேனில் இருவருமே உணரவில்லை. இருவரும் வேலைக்குச் சென்று மாதந்தோறும் ஒரு இலட்சம் உருபாவுக்கு மேல் ஈட்ட விரும்பினார்களே தவிர,  அதன் பின் விளைவாக வீட்டில் மகிழ்ச்சி குறைந்து சோர்வும், ஏமாற்றமும்  நிலைகொள்ளக்கூடும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க மறந்துவிட்டார்கள் !

 

அலுவலகப் பணியால் களைப்புற்று வீடு திரும்பும் போது அவர்களது மனதிற்குள் போட்டு வைத்திருந்த படத்தின்படி அன்றாட வாழ்க்கை   அமையவேண்டும் என்று இருவருமே எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்ப்பதும் தவறு. ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்தனர்; வாழ்க்கையில் போதுமான பட்டறிவும், ஒருவர்க்கொருவர் மற்றவரது  நிலை பற்றிய போதுமான புரிதலும் இன்மையால் அவர்களிடையே கருத்து வேறுபாடு உயர்ந்த மரமாக உருவெடுத்து வளர்ந்துவிட்டது !

 

ஒருநாள், இளவேனில், தன் குழந்தையுடன் தந்தை வீட்டிற்குச் சென்றார்; சென்றவர், அங்கேயே தங்கிவிட்டார். திரும்பி வரவில்லை. அவர் மனதைப் புரிந்துகொள்ளத் தவறிய முத்துக்குமார், மனைவி மீது குற்றச் சாட்டுகளை அடுக்கலானார். மனைவியை அழைத்துவர அவர் போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை. இளவேனிலும் தனது கணவருக்குச் தான் சளைத்தவர் இல்லை என்ற நிலை எடுத்து முத்துக்குமார் மீது குற்றச் சாட்டுகளைச் சொல்லலானார் !

 

உணர்ச்சிவயப்பட்ட மனதிற்கு ஞாயம் எதுவென்று புரியாது. முத்துக்குமார் – இளவேனில் இருவருமே தமக்குள் முளை விட்டிருந்த  சிக்கலை உணர்வைக் குழைத்து  அணுகினார்களே தவிர, அறிவின் துணை கொண்டு ஆராயத் தவறினர். இதனால், தான் செய்வதுதான் ஞாயம் என்று இருவருமே நம்பினர் !

 

கணவன் – மனைவி மனவேறுபாட்டை அவர்கள் தாம் ஒருவர்க்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இருவருமே இதில் இணக்கமான நிலை எடுக்கத் தவறினர். விளைவு – முத்துக்குமார் திருமண முறிவு (DIVORCE) கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்தியாவில் எந்த நீதிமன்றமும் விரைவாகத் தீர்ப்புச் சொல்வதில்லை என்னும் உண்மை அவருக்குப் புரியவில்லை. பலிவாங்கும் பூசாரியை நம்பி ஆடு அவர்பின் செல்வது போலப் பணத்துக்காக வாழும் வழக்குரைஞரை நம்பி முத்துக்குமார் அவர் வழியில் நடக்கலானார் !

 

ஞாயத்தை எடுத்துச் சொல்லி நல்ல  தீர்வு காண முயலும் பெற்றோர் உள்பட யாரையும் முத்துக்குமாரும் நம்புவதில்லை; இளவேனிலும் நம்புவதில்லை. முத்துக்குமாரின் அகவை இப்போது 45. இளவேனிலின் அகவை 40. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து முத்துக்குமாருக்கு மணமுறிவுத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்போது அவருக்கு அகவை 50 ஆகிவிடும். அகவை 50 –க்குப் பிறகு அவருக்கு இன்னொரு இல்லற வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா என்பதை அவர் சிந்திக்க மறுக்கிறார். அதுபோல் 45 –ஆம் அகவைக்குப் பிறகு இன்னொரு இல்லற வாழ்க்கை தனக்கு அமையுமா என்பதை இளவேனிலும் சிந்திக்க மறுக்கிறார் !

 

வாழ்க்கை என்பது மேடும் பள்ளமும் நிறைந்த சாலை போன்றது. அதில் தான், நாம் இல்லறம் என்னும் வண்டியை ஓட்டிச் சென்றாக வேண்டும். கணவன் – மனைவி இருவரும் ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்றால் தான் வாழ்க்கையை வாழமுடியும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாதாடிக் கொண்டிருந்தால் இல்லற ஓடம் கவிழ்ந்து தான் போகும் !

 

தன் பக்கம் தான் ஞாயம் இருக்கிறது என்னும் பிடிவாத நம்பிக்கையை இருவருமே கைவிட வேண்டும். குடும்பத்திற்குள் நீதிமன்ற நடவடிக்கையை நிகழ்த்திக் காட்ட விரும்பினால்  இந்தியாவில் பெரும்பான்மைக் குடும்பங்களில் கணவன் – மனைவி இருவரும் பிரிந்து தான் வாழவேண்டியிருக்கும். கருத்து வேறுபாடு இல்லாத கணவன் மனைவியர் இதோ என்று இவ்வுலகில் யாரையும் சுட்டிக்காட்ட எவராலும் முடியாது. இந்த உண்மையை இருவருமே புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் !

 

இருவரும் செய்கின்ற தவற்றால், அவர்களது வாழ்க்கை மட்டுமல்ல, அவர்கள் குழந்தையின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதை அவர்கள் உணரவில்லை. ”வாழாவெட்டி” என்னும் பட்டத்துடன் இளவேனிலின் வாழ்க்கை பாழாகப் போகிறது. அவரது தாய் தந்தையருக்குப் பிற்காலம் அவர் யாருடைய ஆதரவில் வாழ்வார்,  என்பதை அவர் நினைத்துப் பார்க்க மறுக்கிறார் ! தனித்து வாழும் பெண்களை வெறித்துப் பார்க்கும் இந்த உலகத்தில், ஆதரவற்ற ஒற்றைப் பெண்ணாக அவர் எத்தனை காலத்திற்கு நிம்மதியாக வாழ்ந்துவிடமுடியும் என்பதை  எண்ணிப் பார்க்க வேண்டும் !

 

”மனைவியுடன் குடும்பம் நடத்தத் தெரியாத கோழை” என்ற பட்டத்துடன் முத்துக்குமாரின் வாழ்க்கையும் பாழாகப் போகிறது. அவரது தாய் தந்தையருக்குப் பிற்காலம், முதுமைக் காலத்தில்  அவர் யாருடைய ஆதரவில் வாழ்வார் என்பதை அவரும் எண்ணிப் பார்க்க மறுக்கிறார். ஆதரவுக் கரம் நீட்ட மனைவி என்று ஒருத்தி இல்லாவிட்டால், அவரிடம் இருக்கும் பணம் மட்டுமே மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொண்டு வந்துவிடாது என்பதை அவர் உணரவில்லை. அலையில்லாத கடலும் இல்லை; தவறு செய்யாத மனைவியும் இல்லை; தவறுகளைப் பெரிது படுத்திக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது என்பதை அவர் உணர வேண்டும் !

 

இரண்டு பறவைகளும் திசைமாறிப் பறக்கின்றன. பெரியோர் சொல் கேட்டு தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டால் அவர்கள் இழந்து நிற்கும் இல்லற வாழ்க்கையை மீட்டெடுக்கலாம். இல்லையேல் அவர்கள் இருவரது வாழ்க்கையுடன், அவர்களது குழந்தையின் வாழ்க்கையும் சுழியை (சூன்யம்) நோக்கிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது !

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

”திசை மாறிய பறவைகள்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054, நளி (கார்த்திகை) 06]

(22-11-2023)

-------------------------------------------------------------------------------------------

 


 

 

 

திசை மாறிய பறவை (01)

 

[நிகழ்ச்சிகள் உண்மை; யாருடைய மனமும் புண்படாதிருக்கும் பொருட்டுப் பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளன]

 

சோழ மன்னர்களின் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கியது உறையூர்.  இன்று அஃதொரு  சிற்றூராகச் சுருங்கிச் சுருண்டு  கிடக்கிறது. காவிரியின் தென்கரையில்  இன்றைய திருச்சி மாநகரத்தின் ஒரு பகுதியாக, பத்தோடு பதினொன்றாக, நகர வரைபடத்தில் தனக்கும் ஒரு  இடத்தைப்  பிடித்துக் கொண்டு உறையூர் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது !

 

இவ்வூரைச் சேந்தவர் மருத்துவர் பழனியாண்டவர். மயிலாடுதுறை அருகிலுள்ள ஏதோவொரு ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வந்து உறையூரில் தன் மருத்துவச் சேவையை ஆற்றி வந்தார் ! M.B.B.S படித்து அரசு மருத்துவராகி, சில பதவி உயர்வுகளையும் பெற்று, இறுதியில் பணி ஓய்வுக்குப் பின் உறையூரில் வாழ்ந்து வந்தார் !ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்று வளர்த்துத் தந்த பின் இவரது மனைவி தன் உயிர் மூச்சை நிறுத்திக்கொண்டார் !

 

மனைவியின் மறைவு என்பது ஒவ்வொரு ஆடவனுக்கும் தன் இரு கைகளையும் இழந்து முடமாகிப் போவதற்கு ஒப்பானது. மருத்துவர் பழனியாண்டவரும் மனைவியின் மறைவுக்குப் பின் மனத்தாலும் உடலாலும் பெரிதும் முடங்கிப் போனார் ! ஓரிரு ஆண்டுகள் உருண்டோடிய பின் மனத்தைத் தேற்றிக்கொண்டு மகனையும் மகளையும் உயர் படிப்பு படிக்க வைப்பதில் கவனம் செலுத்தலானார்!

 

அகவை முதிர்ந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவரை அழைத்து வந்து வீட்டையும் பிள்ளைகளையும்  கவனித்துக் கொள்ளச் செய்தார். தனது முழுக் கவனத்தையும் பிள்ளைகளின் படிப்பின் மீதும், ஏழைகளுக்கு மருத்துச் சேவை செய்வதிலும் செலுத்தலானார்.  பிற மருத்துவர்கள் சேவைக் கட்டணமாக உருபா 100 வாங்கி வந்த நிலையில், இவர் உருபா 10 மட்டுமே வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்கலானார். நோயாளிகளிடம் அன்பாகப் பழகி அவர்கள் மனத்தில் நீங்காது நிறைந்து போனார் !

 

நோயாளிகளுக்கு எளிய விலையில் கிடைக்கும் மருந்துகளையே எழுதித் தந்தார். ஏழைகளின் மருத்துவராக விளங்கிய இவர் மருத்துவம் பார்க்க நேரம் எதையும் வரையறுத்துக் கொள்ளவில்லை.

 

மருத்துவம் பார்க்கத் தனது வீட்டின் முன்னறை ஒன்றைப் பயன்படுத்தி வந்தார். முன்றிலில் (இல்லத்தின் முன்பு) வேப்ப மர நிழலில் சாய்வு நாற்காலியில் இயற்கைக் காற்று வாங்கிக் கொண்டு படுத்திருப்பார். நோயாளிகள் வரும்போது முன்னறைக்கு எழுந்து சென்று மருத்துவம் பார்ப்பார்; பிறகு சாய்வு நாற்காலியில் அடைக்கலம் ஆகிவிடுவார் !

 

காலை ஆறு மணிக்குச் சென்றாலும் சரி, இரவு ஒன்பது மணிக்குச் சென்றாலும் சரி, அவர் வீட்டு வாயில், நோயாளிகளுக்காக எந்நேரமும்  திறந்திருக்கும். சொந்தச் சீருந்தும் (CAR), அதை இயக்க வலவரும் (DRIVER) வைத்திருந்தமையால் விரைவு அழைப்புகளை ஏற்று நோயாளியின் இல்லத்திற்கே செல்வதுமுண்டு !

 

பணத்தின் மேல் பற்று வைக்காமல், மனித மனங்களின் மகிழ்ச்சியின் மேல் பற்று வைத்திருந்தார்; ஆகையால் அவரும் மகிழ்ச்சியாக இருந்தார்; அவரிடம் செல்லும் நோயாளிகளும் மகிழ்ச்சியாக  மருத்துவம் பார்த்துக்கொண்டு இல்லம் திரும்பினர் !

 

மாலை நேரத்தில் ஒருமணி நேரம் நண்பர்களுடன் நடைப் பயிற்சி செல்லும் வழக்கமுடைய அவர் தனது 75 -ஆம் அகவையிலும் வலிமையான உடலுடன் நலமாக வாழ்ந்து வந்தார். அவரது மகளைத் திருமணம் செய்து கொடுத்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தன் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் நெய்வேலியில் வாழ்ந்து வந்தார் !

 

அவரது ஒரே மகன் பொறியல் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர்  அங்கேயே பணியைத் தேடிக் கொண்டதுடன் தனக்கு ஒரு மனைவியையும் தேடிக் கொண்டார். அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் வீட்டுக்கு மாப்பிள்ளையாகிப் போனார் !

 

பெருந்தன்மை மிக்க மருத்துவர் பழனியாண்டவர், மகனின் செயல் கண்டு வருந்தினாலும், மகனையும் மருமகளையும் வெறுக்க வில்லை. அவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொண்டு வாழ்த்தி  மகிழ்ந்தார். ஆண்டுகள் சில உருண்டோடின. பழனியாண்டவருக்கு ஒரு பெயரனும் ஒரு பெயர்த்தியும் பிறந்தனர் !

 

மகனையும் மருமகளையும் திருச்சிக்கு வருமாறு அழைத்தார். இரண்டு குழந்தைகளுடன் 2005 –ஆம் ஆண்டு தந்தையைக் காண மகன் வந்திருந்தார். 15 நாள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்த பழனியாண்டவர், மகன் தன் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றவுடன் தனிமைக் கடலில் வீழ்ந்து  தவித்துப் போனார் !

 

இந்த நிலையில் 2012 –ஆம் ஆண்டில் ஒரு நாள் அவருக்குக் கறுப்பு நாளாக விடிந்தது !  அவரைக் காண வந்திருந்த  மருத்துவ நண்பர் ஒருவர் அவரது உடல் இளைப்பைக் கவனித்துவிட்டு  “என்ன பழனி ! உனக்கு சக்கரை நோய் இருக்கும் போல் தெரிகிறதே “ என்று ஒரு வெடிகுண்டை எடுத்து வீசிவிட்டார் !

 

அதிர்ந்து போன பழனியாண்டவர், குருதி ஆய்வு செய்து கொண்டபோது சக்கரை நோய் (சர்க்கரை என்பது பிழை, சக்கரை என்பதே சரி) உறுதியானது.  மனம் உடைந்து போனார். நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் தானே நோயாளி ஆகிவிட்டதை எண்ணி அவரது  மனம் சுடுமண் கலம்  போலச் சுக்கு நூறாக  நொறுங்கிச் சிதறிப் போனது !

 

மகனுடன் எழினி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தன்னைச்  சக்கரை நோய் தாக்கியுள்ளதாகக் கவலையுடன் எடுத்துச் சொன்னார். 75 அகவையைக் கடந்துவிட்ட அவருக்கு, இந்த முதுமைக் காலத்தில் துணையாக இருக்க மனைவியுமில்லை; மகனோ அமெரிக்காவில்; மகளோ நெய்வேலியில் !

 

பணிப் பெண்ணின் உதவியுடன் நடமாடும்  தான், சக்கரை நோய்க்கு இடமாகி, தனிமைத் துயரில் தனித் தீவில் வாழ்வது போல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று மகனிடம் புலம்பினார். “நீ குடும்பத்துடன் திருச்சிக்கு வந்துவிடு. இந்த முதுமைக் காலத்தில் எனக்குத் துணையாக இரு” என்று வெண்ணெய்யாக மனம் உருகி அழைத்தார்!

 

“சக்கரை நோய் வந்திருக்கிறது என்றால் மாத்திரை மருந்துகள் வாங்கிச் சாப்பிடு. நான் அங்கு வந்து உன்னுடன் தங்கினால் உனக்கு வந்திருக்கும் சக்கரை நோய் நீங்கிவிடுமா? வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் இருக்கும் உனக்காக என் பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றைப் பாழ்படுத்திக் கொண்டு நான் அமெரிக்காவை விட்டு வர முடியாது” !

 

“பழுத்த இலை உதிர்வதைப் பற்றி நான் கவலைப் பட முடியாது; என்னுடன் இருக்கும்  துளிர் இலைகளின் வளர்ச்சி பற்றி தான் நான் கவலைப் பட முடியும். எழினி மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு என் மன நிம்மதியைக் கெடுத்து விடாதே” !

 

சுட்டு விரலைப் பற்றிக்கொண்டு ”அப்பா ! அப்பா ! “ என்று கொஞ்சிக் கொஞ்சிப் பேசி  தன்னுடன் தளர் நடை பயின்ற இளம் அகவை மகன் எங்கே, அடிக்கடி தொடர்பு கொண்டு என் மன நிம்மதியைக் கெடுத்து விடாதே என்று அன்பை மறந்து பேசும் இன்றைய 40 அகவை மகன் எங்கே?

 

கைதவறி விழுந்துவிட்ட முகம் பார்க்கும் கண்ணாடியாகிப் போனது பழனியாண்டவரின் கனிந்த உள்ளம். திசை மாறிய பறவை இனித் திரும்பி வரப் போவதில்லை ; இனி நான் யாருக்காக வாழவேண்டும்? அவரது எண்ணங்கள் தறிகெட்டு ஓடின ! அவ்வளவு தான் !

 

மறு நாள் நடைப் பயிற்சிக்காகத் தனியாகக் கிளம்பிப் போன பழனியாண்டவர், பயிற்சி முடிந்து வீடு திரும்பவில்லை ! ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன ! அவர் இருக்குமிடம் இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை ! எங்கு போனார் என்பதும் தெரியவில்லை ! உயிருடன் இருக்கிறாரா, இல்லையா ? இந்த வினாவுக்கும் யாருக்கும் விடை தெரியவில்லை ! இதில் உள்ளுறையாகப் படிந்து கிடக்கும்  துன்ப நிலை என்ன தெரியுமா ? காணாமற் போய்விட்ட  தந்தையைத் தேடிக் கண்டு பிடிக்க அமெரிக்காவில் இருக்கும் மகன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; இந்தியாவுக்கும் வரவில்லை !

 

பழனியாண்டவர் செய்த தவறு தான் என்ன ? பெற்ற பிள்ளை மீது அளவுகடந்து பற்று வைத்தது தானோ ? பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்னும் சொலவடையைச் சும்மாவா சொல்லியிருப்பார்கள் நம் முன்னோர் ?

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

”திசை மாறிய பறவைகள்” வலைப்பூ,,

[திருவள்ளுவராண்டு: 2054, நளி (கார்த்திகை) 03]

{19-11-2023}

-----------------------------------------------------------------------------------------------